நவம்பர், 2022 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: நவம்பர் 2022

எச்சரிப்பின் சப்தங்கள்

நீங்கள் எப்போதாவது ஒரு விரியன் பாம்பினை அருகில் பார்த்ததுண்டா? அப்படியானால், நீங்கள் அருகில் செல்லும்போது, அதின் சத்தம் மிகவும் உக்கிரமாக இருப்பதை கவனித்திருக்கக்கூடும். ஆபத்துகள் தன்னை நெருங்கும்போது, பாம்புகள் பொதுவாக சத்தமிடும் வீரியத்தை அதிகப்படுத்துகின்றன என்ற ஆராய்ச்சி சொல்லுகிறது. இந்த அதிர்வலைகள், அவைகள் இருக்கவேண்டிய இடத்தைக் காட்டிலும் மிக நெருக்கமாக இருக்கின்றன என்பதை அவைகளுக்கு தெரியப்படுத்துகின்றன. ஒரு ஆராய்ச்சியாளர், “கேட்பவர் தவறான எல்லைக்குள் வந்துவிட்டதாக, தனக்கு ஒரு பாதுகாப்பு விளிம்பை ஏற்படுத்திக்கொள்கிறது" என்று சொல்லுகிறார். 

சண்டையிடும்போது, மற்றவர்களை திட்டும் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கும்போது, அதிக ஓசை எழுப்பக்கூடும். இதுபோன்ற தருணங்களுக்கு உகந்த வகையில் நீதிமொழிகளின் ஆசிரியர் ஞானமான ஆலோசனைகளைக் கொடுக்கிறார்: “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” (நீதிமொழிகள் 15:1). மேலும் மென்மையான பதில், “ஜீவவிருட்சம்” என்றும் “அறிவை இறைக்கும்” (வச. 4,7) என்றும் சொல்லுகிறார். 

நாம் யாருடன் சண்டையிடுகிறோமோ, அவர்களிடம் தன்மையாய் பேசுவதற்கான முக்கியமான காரணத்தை இயேசு சொல்லுகிறார்: நாம் அவருடைய பிள்ளை என்பதை வெளிப்படுத்தும் அன்பை பிரதிபலிப்பதின்; மூலமாகவும் (மத்தேயு 5:43-45) மற்றும் நல்லிணக்கத்தைத் தேடுதலின் மூலமாகவும் (18:15) அது சாத்தியமாகும். சச்சரவுகளின் போது நம் குரலை உயர்த்தியோ அல்லது கனவீனமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தேவன் தம்முடைய ஆவியின் மூலம் நம்மை வழிநடத்துவது போல் மற்றவர்களுக்கு நாகரீகம், ஞானம் மற்றும் அன்பைக் காட்டுவோம்.

சூடான உணவு

பார்பிக்யூ கோழி இறைச்சி, பீன்ஸ், பாஸ்தா, ரொட்டி. ஒரு அக்டோபர் மாதத்தில் தன்னுடைய 54ஆம் பிறந்த நாளை கொண்டாடும் ஒரு பெண்மணியிடமிருந்து 54 ஆதரவற்றவர்கள் இந்த உணவை பரிசாகப் பெற்றுக்கொண்டனர். அந்தப் பெண்ணும் அவளுடைய நண்பர்களும், ஒரு உணவகத்தில் தங்கள் விருந்தை வழக்கமாய் அநுசரிக்காமல், சிகாகோவின் தெருக்களில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு உணவை சமைத்து பரிமாற தீர்மானித்தனர். மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக, மற்றவர்களையும் அவர்கள் பிறந்த நாளுக்கு அதுபோல காரியங்களை செய்யும்படி ஊக்குவித்தாள். 

இந்த சம்பவம், மத்தேயு 25-ல் இடம்பெற்றள்ள இயேசுவின் வார்த்தைகளை எனக்கு நினைவூட்டுகிறது: “அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்” (வச. 40). அவருடைய ஆடுகள் தங்கள் சுதந்திரத்தை அடையும்படிக்கு தன்னுடைய நித்திய இராஜ்யத்திற்குள் அழைக்கப்படும் என்று சொன்ன பிறகே இந்த வார்த்தைகளைச் சொன்னார் (வச. 33-34). அந்த தருணத்தில், அவர்கள் மெய்யான விசுவாசத்தில் அவருக்கு உணவளித்து, உடுத்தியவர்கள் என்பதை ஒப்புக்கொள்வார் (அவரை நம்பாத பெருமையுள்ள மதவாதிகளைப் போலல்லாமல்; பார்க்கவும் 26:3-5). நாங்கள் எப்போது உங்களுக்கு உணவளித்து, உடுத்துவித்தோம் என்று “நீதிமான்கள்” அவரைப் பார்த்துக் கேட்பார்கள் (25:37). “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (வச. 40) என்று பதிலளிப்பார். 

என்னோடு நட!

சில ஆண்டுகளுக்கு முன்பு, “இயேசு என்னுடன் நடக்கிறார்" என்ற பாடலை நற்செய்தி பாடகர் ஒருவர், பாடகர் குழுவுடன் பாடி, பிரபலமாக்கினார். அந்த பாடலின் வரிகளுக்குப் பின்னால் ஒரு அழகான கதை உள்ளது.

ஜாஸ் இசைக்கலைஞர் கர்டிஸ் லுண்டி, அவர் போதை மருந்து மறுவாழ்வு சிகிச்சையில் இணையும்போது, ஒரு பாடகர் குழுவைத் துவங்கினார். தன்னோடு சிகிச்சை பெற்ற சக நோயாளிகளை ஒன்றாக இணைத்து, அவர்களுக்கு ஒரு பழைய பாடலின் மீது இருக்கும் தாகத்தை அடிப்படையாய் வைத்து இந்த புதிய பாடலை அவர்களுக்காக இயற்றினார். “நாங்கள் எங்கள் வாழ்க்கைக்காய் பாடினோம்; இந்த போதைப் பழக்கத்திலிருந்து எங்களை முற்றிலும் விடுவிக்கும்படியாய் கிறிஸ்துவிடம் பாடினோம்” என்று அக்குழுவினர் ஒரு உறுப்பினர் ஒருவர் சொன்னார். மற்றொருவர் அந்த பாடலைப் பாடியபோது, அவளுடைய தீராத வலி தணிந்ததை சாட்சியிட்டார். அந்த பாடகர் குழு, தாளில் எழுதப்பட்டிருந்த வெறும் வார்த்தைகளை உச்சரிக்கவில்லை; மாறாக, மீட்கப்பட்ட வாழ்க்கைக்கான ஜெபத்தை ஏறெடுத்தனர். 

இன்றைய வேத வாசிப்பு அவர்களின் அனுபவத்தை நன்றாக விவரிக்கிறது. கிறிஸ்துவின் மூலம், எல்லா ஜனத்திற்கும் இரட்சிப்பை கொடுப்பதற்காக தேவன் வெளிப்பட்டார் (தீத்து 2:11). நித்திய வாழக்;கை என்பது இந்த பரிசின் ஒரு வெளிப்பாடாய் இருக்கையில் (வச. 13), நம்முடைய சுயக்கட்டுப்பாட்டை திரும்பப் பெற்றுக்கொள்வதற்கும், உலக ஆசைகளை புறக்கணிப்பதற்கும், அவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கைக்கு நம்மை மீட்டெடுக்கவும் தேவன் நம்மில் கிரியை செய்கிறார் (வச. 12, 14). அந்த பாடல் குழுவினர் கண்டறிந்தபடி, இயேசு நம் பாவங்களை மட்டும் மன்னிக்கவில்லை, நம்மை அழிவுக்கேதுவான வாழ்க்கை முறைகளிலிருந்தும் விடுவிக்கிறார். 

இயேசு என்னோடு நடக்கிறார். அவர் உங்களுடனும் நடக்கிறார். அவரை தேடுகிற யாவரோடும் அவர் நடக்கிறார். இப்போது இரட்சிப்பை அருளுவதற்கும், எதிர்காலத்தின் நம்பிக்கையை அருளுவதற்கும் அவர் நம்மோடு இருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அன்பான தலைமைத்துவம்

ஒரு தாய் கரடி தன்னுடைய நான்கு குட்டிகளையும் தூக்கிக்கொண்டு மனிதர்கள் நடமாடும் வீதியில் வலம்வந்த காணொலியை பார்த்தது என் முகத்தில் புன்னகையை வருவித்தது. அது தன் ஒவ்வொரு குட்டிகளையும் சாலையின் மறுபுறம் கொண்டு செல்வதும், அவைகள் மீண்டும் திரும்பி வருவதையும் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. அந்த தாய் கரடி, ஒரு கட்டத்தில் தன் நான்கு குட்டிகளையும் ஒருசேர தூக்கிக்கொண்டு ஒரேயடியாய் சாலையை பாதுகாப்புடன் கடந்தது.  
ஒரு தாயின் சலிப்படையாத இந்த செய்கையை காண்பிக்கும் இந்த காணொலியானது, தெசலோனிக்கேய திருச்சபை விசுவாசிகள் மீது பவுல் வைத்திருக்கும் அன்பை விவரிக்க பவுல் பயன்படுத்திய உருவகத்தோடு ஒத்துப்போகிறது. அவருடைய அதிகாரத்தை வலியுறுத்துவதற்குப் பதிலாக, தன்னுடைய வேலையை தன்னுடைய இளம் குழந்தைகளை பராமரித்துக்கொள்ளும் பெற்றோருக்கு ஒப்பிடுகிறார் (1 தெசலோனிக்கேயர் 2:7,11). தெசலோனிக்கேய மக்கள் மீதான இந்த ஆழமான அன்பே (வச. 8), பவுல் அப்போஸ்தலரை உற்சாகப்படுத்தி, தேற்றி, தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழச் செய்தது (வச. 12). தெய்வீக வாழ்க்கைக்கான இந்த உணர்ச்சிபூர்வமான அழைப்பு, அவர்கள் தங்கள் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் தேவனை கனப்படுத்துவதை பார்க்கவேண்டும் என்ற அவரது அன்பான விருப்பத்தின் விளைவாகும்.  
நமது தலைமைத்துவ வாய்ப்புகள் அனைத்திலும், அதிலும் குறிப்பாக பொறுப்புகள் நம்மை சோர்வடையச் செய்யும் போது பவுலின் இந்த உதாரணம் நமக்கு வழிகாட்டியாக அமையும். கர்த்தருடைய ஆவியானவராலே நடத்தப்பட்டு, நம்முடைய தலைமைத்துவத்தின் கீழ் இருப்பவர்களை மென்மையாகவும் உறுதியாகவும் நேசித்து வழிநடத்துவோம்.

அன்பினிமித்தம்

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பது என்பது உங்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலப்படுத்துகிறது. ஆனால் உயர்நிலை பள்ளியில் படிக்கும் ஒரு வீராங்கனைக்கு ஓட்டப்பந்தயம் என்றால் தள்ளிக்கொண்டுபோவது என்று விளங்கியிருக்கிறது. ஒவ்வொரு பயிற்சியின்போதும், பதினான்கு வயது நிரம்பிய சூசன் பெர்க்மான் தன்னுடைய மூத்த சகோதரன் ஜெஃப்ரியை  அவனுடைய சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டே ஓடுவாள். ஜெஃப்ரி பிறந்து இருபத்தி இரண்டு மாதத்தில் அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அதின் விளைவாய் கடுமையான மூளை பாதிப்பு மற்றும் பெருமூளை வாதம் ஏற்பட்டது. இன்று சூசன் தன்னுடைய சகோதரனுக்காக அவளுடைய தனிப்பட்ட ஓட்டப்பந்தய இலக்குகளை தியாகம் செய்துவிட்டாள். ஆகையினால் ஜெஃப்ரியும் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ளமுடிகிறது. இந்த தியாகமான அன்பு ஆச்சரியப்படவைக்கிறது.  
பவுல் அப்போஸ்தலர் “ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்” என்று எழுதும்போது இந்த அன்பையும் தியாகத்தையும் சிந்தையில் வைத்தே எழுதியிருக்கிறார் (ரோமர் 12:10). ரோமத் திருச்சபையில் இருக்கும் விசுவாசிகள் பொறாமை, கோபம் மற்றும் ஆழமான கருத்து வேறுபாடுகளுடன் போராடுகிறார்கள் என்பதை பவுல் அறிந்திருந்தார் (வச. 18). எனவே, தெய்வீக அன்பு அவர்களின் இதயங்களை ஆள அனுமதிக்கும்படி அவர் அவர்களை ஊக்குவித்தார். கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றிய இந்த வகையான அன்பு, மற்றவர்களுக்கு மேன்மையான நன்மையை கொடுக்க பிரயாசப்படும். அது நேர்மையானதாகவும், தயாள குணம் படைத்ததாகவும் வெளிப்படும் (வச. 13). இந்த வழியில் அன்பு செலுத்துகிறவர்கள் தங்களைக் காட்டிலும் மற்றவர்களை கனம் பெற்றவர்களாய் கருதுவார்கள் (வச. 16).  
கிறிஸ்தவர்களாகிய நாம், மற்றவர்களுக்கு துணைபுரிந்து ஓட்டத்தை நேர்த்தியாய் ஓடச்செய்து இலக்கை அடையச்செய்யும் அன்பின் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். அது கடினமானதாய் தெரிந்தாலும் அது இயேசுவுக்கு கனத்தைக் கொண்டுவருகிறது. அன்பினிமித்தம் நாம் அவரை சார்ந்துகொண்டு, மற்றவர்களை நேசிக்கவும் அவர்களுக்கு சேவை செய்யவும் பிரயாசப்படுவோம்.  

எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?

“ஐயோ!” எனக்கு முன்பாக போய்க்கொண்டிருந்த பழுதுபார்க்கும் லாரி திடீரென்று திரும்பியதால் நான் அலறினேன்.  
அந்த வாகனத்தில் பின்புறம் “எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?” என்று கேட்டு அதற்கு கீழ் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டேன். நான் ஏன் அழைக்கிறேன் என்று ஒரு பெண் என்னிடம் கேட்டார். நான் என் விரக்தியை கோபமாய் வெளிப்படுத்தினேன். டிரக்கின் நம்பரை குறித்துக்கொண்டாள். பின்னர் அவள், “எப்போதும் நன்றாக வாகனம் ஓட்டும் ஒருவரைக் குறித்து சொல்லுவதற்கும் நீங்கள் எங்களை அழைக்கலாம்” என்று சோர்வுடன் சொன்னாள். 
அவளுடைய அந்த சோகமான வார்த்தைகள் என்னை தடுமாறச் செய்தது. என் தவறை நான் உணர்ந்தேன். எனக்கு நியாயம் வேண்டும் என்பதற்காக, நான் பேசிய கோபமான வார்த்;தைகள் அந்த கடினமான வேலை செய்யும் பெண்ணை எந்த அளவிற்கு காயப்படுத்தியிருக்கவேண்டும் என்று யோசித்தேன். என்னுடைய விசுவாசத்திற்கும் கனிகொடுக்கும் ஜீவியத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு அற்றுபோனதாக அவ்வேளையில் நான் உணர்ந்தேன்.  
நம்முடைய செய்கைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைத் தான் யாக்கோபு நிருபம் வெளிப்படுத்துகிறது. யாக்கோபு 1:19-20இல் “ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே” என்று வாசிக்கிறோம். மேலும் அவர், “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (வச. 22) என்றும் ஆலோசனை கூறுகிறார்.  
நாம் யாரும் நேர்த்தியானவர்கள் இல்லை. சில வேளைகளில் நம்முடைய வாழ்க்கை என்னும் வாகனத்தை ஓட்டும்போது, நம்முடைய கடினமான வாழ்க்கைப் பாதையில் அவர் நம்முடைய கடினமான சுபாவங்களை மாற்றுவார் என்று நம்பி அவரை சார்ந்துகொள்ள முற்படுவோம்.